மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவிகள் தாக்குதல் நடத்தியதில், 20 பேர் காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (13) மதியம் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது: மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் (Brownswick) தோட்டத்தின் புரவுன்சீக் பிரிவில் பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் இருந்த மரமொன்றில் கட்டப்பட்டிருந்த பெரிய குளவிக்கூடு திடீரென களைந்து தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது.
இதில் 20 பெண் தொழிலாளர்கள் கடுமையான குளவிக்கொட்டுக்கு இலக்காகி, உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பெண்கள் வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெற்றுத் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். எனினும், அதிகளவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உடம்பில் நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ள 8 பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் விடுதியில் தங்கி அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்.
