இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய சி.டி விக்ரமரத்ன (சந்தன தீபால் விக்ரமரத்ன) காலமானார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கியால் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தலவத்துகொட, தலகேன பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
34 வருடங்களுக்கும் மேலான பொலிஸ் சேவை
கடந்த 1986 ஆம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக (ASP) தனது பொலிஸ் சேவையை ஆரம்பித்த சி.டி.விக்ரமரத்ன, சுமார் 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவராவார்.
பதில் கடமையிலிருந்து 35 ஆவது பொலிஸ் மா அதிபராக உயர்வு
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, அப்போதைய பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
சுமார் ஒரு வருடமும் 7 மாதங்களும் பதில் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய அவர், பின்னர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார்.
பல்வேறு சேவை நீடிப்புகளுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த சி.டி விக்ரமரத்ன, கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் தனது பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது திடீர் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
