தெஹிவளை – கல்கிசை ‘நிசல செவன’ பொது மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (19) பிற்பகல் 03.25 மணியளவில் நடத்தப்பட்டிருந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் “சண்டோ” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் தெஹிவளை, ஓபன் சைட் மீனவர் குடியிருப்பில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பொது மயானத்திற்குள் நுழைந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டினால் அவரது இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காணொளிகளின் ஊடாக வௌிவந்துள்ளது.
