நாளை (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெள்ளை முட்டையொன்றின் விலையை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றின் விலையை 42 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குளியாப்பிட்டியவில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
முட்டை விலை அதிகரிப்புக்கான முழுமையான மற்றும் நேரடிப் பொறுப்பை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே ஏற்க வேண்டும் என சரத் ரத்நாயக்க இதன்போது குற்றம் சுமத்தினார். தற்போதைய முட்டை உற்பத்தித் வீழ்ச்சிக்கு தீவனப் பிரச்சினையே முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
“நாட்டின் சோளம் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், உள்நாட்டு சோள உற்பத்தியும் முட்டைத் தொழிலுக்குத் தேவையான அளவிற்கு போதுமானதாக இல்லை.”
தீவனத் தட்டுப்பாடு காரணமாக சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கோழிகளின் ஆரோக்கியம் மற்றும் சமிபாட்டுத் தொகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக, நாட்டின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கிடையில், சந்தையில் சில மோசடி வியாபாரிகள் விலங்கு உணவுகளில் பல்வேறு ஆபத்தான இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதாக சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறான தரமற்ற உணவுகளை உட்கொள்வதால் பெருமளவிலான கோழிகள் உயிரிழந்து வருவதாகவும், இதனால் பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
இந்தத் தீவிரமான நிலைமைகள் குறித்தும், தினசரி முட்டை உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருவது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நன்கு அறிந்திருந்த போதிலும், அதனைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டம் எதனையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
