ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்த இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிக்கும் தீர்ளானது எந்தவொரு நபரையும் அல்லது குழுவையும் இலக்காகக் கொண்டது அல்லவென்றும், இது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் மாத்திரமே என்றும் வலியிறுத்தினார்.
நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மாத்திரம் நடைபெறுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என்றார். அந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்கவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அவற்றை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஓய்வூதிய வயது எல்லையை நீடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்தனர். எனினும், இந்தத் தீர்மானம் குறித்து மேலும் ஆராய்ந்து பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
இச்சந்திப்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
