சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிவாரண மற்றும் புனரமைப்பு நிதியில், இதுவரை வெறும் 30 சதவீத மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 70 சதவீத நிதியை உடனடியாகப் பயனாளிகளுக்கு விநியோகிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் மூலம் நஷ்டஈட்டு வழங்குவதற்காகவும், வெள்ளம் மற்றும் நிலநச்சரிவால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் மொத்தம் 86.7 பில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதில் வெறும் 26.4 பில்லியன் ரூபாய் அதாவது சுமார் 30 சதவீதம் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் 60.3 பில்லியன் ரூபாய் அரச துணைக் கணக்குகளிலேயே தேங்கிக் கிடப்பதாகப் பொக்கிஷப் (Treasury) அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கமைய, பேரிடர் மேலாண்மைப் பிரிவின் மேலதிக செயலாளர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதன்படி, எஞ்சியுள்ள 70 சதவீத நிவாரண நிதியை எத்தகைய தாமதமுமின்றி உடனடியாகப் பயனாளிகளின் கைகளுக்குச் சேர்ப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றும் பணிகளிலும் பெரும் தொய்வு நிலவுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்காக ஒதுக்கப்பட்ட 1.05 பில்லியன் ரூபாயில், ஜூலை 31ஆம் திகதி வரை வெறும் 190 மில்லியன் ரூபாய் மட்டுமே (அதாவது 18 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 82 சதவீதமான 868 மில்லியன் ரூபாய் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது.
எனினும், அவசரகால நிவாரண வழங்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதன்படி, அவசரகால உதவிகளுக்காக விடுவிக்கப்பட்ட 7.6 பில்லியன் ரூபாயில், 85 சதவீதமான நிதி ஜூலை 31ஆம் திகதிக்குள் நேரடியாகப் பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும், சூறாவளியால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக விஸ்தரிக்கவும் நிதி விடுவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தைத் தவிர்த்து, துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Source newswire
