வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
வாடகை வாகன ஓட்டுநர்கள் அல்லது வாகன சேவைகளில் உதவி புரிபவர்கள் சம்பந்தப்பட்ட சில குற்றச் சம்பவங்கள் குறித்துத் தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்து, காவல் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் இந்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, பயணிகள் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
பதிவுச் சரிபார்ப்பு: பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரையும் சரிபார்க்க வேண்டும்.
நேரலை இருப்பிடப் பகிர்வு: குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் (Google Map) மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களைக் கண்காணிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தனிவழிப் பயணங்களில் விழிப்புணர்வு: இரவு நேரப் பயணங்களின் போது, ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் செல்ல முயன்றால் பயணிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உணவு மற்றும் பானங்களைத் தவிர்த்தல்: பயணத்தின் போது முகம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது. மயக்க மருந்து கலந்த பொருட்களைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் புரிவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
விலைமதிப்பற்ற பொருட்கள் பாதுகாப்பு: பயணத்தின் போது பணம், மடிக்கணினி (Laptop), கைத்தொலைபேசி மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களைப் பிறருக்குத் தெரியும் வகையில் வெளிப்படையாக வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அவசர உதவி எண்கள்:
பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாகக் காவல்துறையின் அவசர உதவி எண்களான 119 அல்லது அவசர தகவல் சேவையான 118 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என நினைவூட்டியுள்ள காவல்துறை, பயணிகளை அழைத்துச் செல்லும்போது முறையான நடத்தை விதிகளைப் பின்பற்றுமாறு ஓட்டுநர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
