யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த 37 வயதுடைய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், அலுவலக வளாகத்தில் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
அரச அலுவலகங்களுக்கு இடையிலான உற்பத்தித்திறன் போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ள நிலையில், அலுவலகத்தை அழகுபடுத்தும் பணிகளுக்காக ஊழியர்கள் வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, செயலக வளாகத்திலுள்ள மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் குறித்த பெண் உத்தியோகத்தர் ஈடுபட்டிருந்தவேளை, அங்கிருந்த பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புற்றதால் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
