ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளைக் காரணம் காட்டி அவர்களுக்கு எதிராக உடல் ரீதியான தண்டனைகளையோ அல்லது உளவியல் ரீதியான துஷ்பிரயோகங்களையோ மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது உளவியல் ரீதியில் துன்புறுத்துவதையோ தவிர்க்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான உள்ளடக்கங்களை பிள்ளைகளுக்கு வெட்கத்தையோ, மன உளைச்சலையோ அல்லது சங்கடத்தையோ ஏற்படுத்தும் வகையில் ஊடக நிறுவனங்களும் சமூக வலைத்தளப் பயனாளர்களும் வெளியிடுவதிலிருந்தோ அல்லது பரப்புவதிலிருந்தோ த தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய செயற்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களின் கீழ் வரக்கூடும் எனவும், பொறுப்பானவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் எச்சரித்துள்ளது.
