பதுளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவிற்கு தனிப்பட்டவகையில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவரது ஆலோசனையின் பேரில் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினரால் பதுளை பிலக்கடை பகுதியில் வைத்து 45 வயதுடைய புஸ்ஸலாவ தல்தென்ன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய போது மலைக்குருவி கூட்டுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் புஸ்ஸலாவ தல்தெனிய பகுதியில் உள்ள சிறிய கற்குகைகள், சிறிய சுரங்கங்களுக்குள் இருந்து கூடுகளை உடைத்து எடுத்து வந்ததாகவும் இதனை கொழும்பு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காகவே கொண்டு பதுளைக்கு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் வனவிலங்கு கட்டளை சட்டத்தின் படி இலங்கையில் பாதுகாக்கப்படும் பறவைகளில் இதுவும் ஒன்று என பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
