சீனாவில் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 25,517 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியானது. கடந்த 2019 டிசெம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் சீனாவில் அண்மைக்காலத்தில் மிக அதிகமாக ஒரு நாள் பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஜீரோ கொவிட் என்ற இலக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், கொரோனா வீரியம் குறைந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சீனாவின் ஐஃபோன் தயாரிப்பு ஆலை அமைந்துள்ள செங்சோவ் பகுதியில் பொலிஸாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் போராட்டம் வெடித்தது. கொரோனாவால் விடுப்பில் சென்றவர்களுக்குப் பதிலாக வேறு பணியாட்களை நியமிக்கக் கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்தது.