ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 3 இந்தியர்கள் காயம்
டுபாய்: ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடல் எல்லைக்குள் நுழைந்த மூன்று ஈரான் ஏவுகணைகளை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து டுபாய் மற்றும் ஷார்ஜாவுக்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்புக் கிடங்கான ஃபுஜைரா (Fujairah) எண்ணெய் துறைமுகத்தை இலக்கு வைத்து ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆளில்லா விமானத் தாக்குதலால் துறைமுகப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் போது அங்கிருந்த மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தாக்குதலால் ஏற்பட்ட பெரும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படைகளும் மீட்புக் குழுவினரும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். ஃபுஜைரா துறைமுகம் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இடமாகும். இதற்கு முன்னரும் போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு முன்பாக இத்துறைமுகம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறித்து ஈரான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது கருத்துகளோ வெளியிடப்படவில்லை.
இந்தத் திடீர் தாக்குதலால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
