மேற்கு ஆசியப் போரை முடிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்: டிரம்பும், ஈரானும் அதிகாரப்பூர்வ கையெழுத்து!
மேற்கு ஆசியாவில் நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, வெர்சாய் அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அளித்த இரவு விருந்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரான்ஸ் அதிபருடனான இரவு விருந்தின் போது ஜனாதிபதி டிரம்ப் தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தின் பிரதியில் கையெழுத்திட்டதாக ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனத்திடம் பேசிய மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர், “டிரம்ப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை எங்களால் உறுதிப்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
விருந்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த ஒப்பந்த ஆவணத்தை டிரம்பிடம் வழங்கியதாகவும், “இது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை” எனக் கூறி டிரம்ப் அதில் கையெழுத்திட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
மறுபுறம், அமெரிக்காவுடனான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (Islamabad Memorandum of Understanding) மின்னணு முறை மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிகள் மூலம் இறுதி செய்யப்பட்டுள்ளதை ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இரு நாட்டு அதிபர்களின் கையொப்பங்களுடன் ஒப்பந்தத்தின் உரை தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. இனி இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் சோதனைக் கட்டம் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
உடனடி போர் நிறுத்தம்: அனைத்துப் முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்தப்படும்.
ஹொர்முஸ் நீரிணை திறப்பு: உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு முக்கிய அங்கமான ஹொர்முஸ் நீரிணை (Strait of Hormuz), வணிகக் கப்பல்களின் கட்டணமில்லா போக்குவரத்திற்காக அடுத்த 30 நாட்களுக்குள் முழுமையாகத் திறக்கப்படும்.
பொருளாதாரத் தடைகள் நீக்கம்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் சில முக்கிய பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவதுடன், முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியும் விடுவிக்கப்படும். அதற்குப் பதிலாக ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அழிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரியத் தொடங்கியுள்ளதுடன், மேற்கு ஆசியப் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பதற்ற நிலை முடிவுக்கு வரும் என உலகத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
