அரச பேருந்தில் மாணவர்களிடம் அடாவடி காட்டும் நடத்துனர்.
நுவரெலியாவில் இருந்து நானுஓயா ஊடாக தலவாக்கலைக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் 2:20 மணிக்கு நிறுத்தப்பட்டு பயணிகளுடன் 2:40 மணிக்கு தலைவாக்கலை நோக்கிப் புறப்படும் இதில் நடத்துனராக செயற்படும் நபர் பாடசாலை மாணவர்களிடம் பொறுப்பற்ற, அநாகரிகமான நடந்து கொள்வதாகவும் குறித்த அரச பேருந்தில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை குறித்த பேருந்து நடத்துநரிடம் காண்ம்பிக்கும் போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை தகாத வார்த்தை மூலம் திட்டுவதாகவும் மாணவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஆசனங்களில் அமர்ந்திருக்கும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி எழுப்புவதும், தரக்குறைவாகப் பேசுவது போன்ற நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாகத் தொடர்கின்றது எனவும் குறிப்பாக (23) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் இருந்து நானுஓயா கிளாரண்டன் பகுதியில் இறங்க வேண்டிய நான்கு பாடசாலை மாணவர்களை இறக்கிவிட்ட நடத்துனர், அவர்களின் புத்தகப் பைகளைத் தர மறுத்துள்ளார். அந்தப் பைகளைப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த பேருந்து தலவாக்கலை சென்று மீண்டும் நுவரெலியா நோக்கி பயணம் செய்யும் போது கிளாரண்டன் பகுதிக்கு வரும் வரை மாணவர்கள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது .
எனவே மாணவர்களை இவ்வாறு காத்திருக்கச் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபை தலைமை அலுவலகத்திற்குத் தொலைபேசி வாயிலாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தொடர்ந்து இ.போ.ச பேருந்து நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு குறித்த நடத்துனர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும், இவ்வாறான சிரமங்களைத் தவிர்க்கவும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
