“அரசியல் அதிகாரப் பாதுகாப்பை ஒழிப்போம்; PTA சட்டம் இந்த ஆண்டு நீக்கப்படும்” – ஜனாதிபதி அநுர குமார அதிரடி!
ஊழல், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து அரசியல் அதிகாரப் பாதுகாப்புகளும் முற்றிலும் ஒழிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (25) அதிரடியாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட “போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது” குறித்த பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஊழல் மற்றும் குற்றங்களை ஒடுக்குவதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் நாட்டில் உள்ள போதிலும், துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம் பிரதான குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாறியுள்ளதாக ஜனாதிபதி சாடினார்.
“இன்று நியாயம், நீதி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை எதிர்க்கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளது. அரச அனுசரணையுடன் இழைக்கப்பட்ட குற்றங்களை வெளிப்படுத்துவது தேசத்துரோகம் அல்ல; அது ஒரு நாகரீகமான அரசை கட்டியெழுப்பும் நோக்கமாகும்.”
விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆனந்த விஜேபால மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் திலீப பீரிஸ் ஆகியோர் இன்று எதிர்க்கட்சியின் எதிரிகளாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மீது அரசாங்கத்திற்கு முழு கௌரவம் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆனால் ஒரு சிறிய குழுவினர் ஒரு குடும்பத்தின் அல்லது அரசியல் முகாமின் அதிகாரத்திற்காக குற்றங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குத் தண்டனை வழங்க அரசாங்கம் தயங்காது என எச்சரித்தார்.
“தாஜுதீன் விவகாரமாக இருந்தாலும் சரி, ஈஸ்டர் தாக்குதலாக இருந்தாலும் சரி… இவற்றின் பின்னணியில் மிகச் சிறிய அரச இயந்திரத்தின் இயக்குநர்கள் இருந்தனர். வெள்ளை வென் கலாச்சாரத்தின் மூலம் மனிதர்களைக் கடத்திய காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு எதிராகச் சட்டம் நிச்சயமாக நிலைநாட்டப்படும்” என்றார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஊழலே பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊழல் மூலம் ஈட்டப்பட்ட பெருமளவிலான பணம் ‘TT’ (Telegraphic Transfer) ஊடாக டொலர் வடிவில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார். இது தனிப்பட்ட பழிவாங்கல் அல்ல என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தங்களை நிரூபிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விபரங்களை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்:
| போதைப்பொருள் வகை | கைப்பற்றப்பட்ட அளவு |
| ஹெரோயின் | 3,390 கிலோ |
| கொகெய்ன் | 304 கிலோ |
| ஐஸ் (Ice) | 5,543 கிலோ |
| குஷ் (Kush) | 1,521 கிலோ |
| போதை மாத்திரைகள் | 5,110,731 |
| போதை குளிசைகள் | 2,454,267 |
மேலும், சர்வதேச ரீதியில் ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) விடுக்கப்பட்டிருந்த 23 பேர் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 35 பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 46 வருடங்களாக நாட்டில் கடுமையான விமர்சனங்களுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் முற்றாக நீக்கப்படும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை ஜனாதிபதி விடுத்தார்.
மக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் முற்றிலும் பாதுகாக்கப்படும் வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒரு புதிய வரையறுக்கப்பட்ட சட்டமூலம் (Organized Crime Bill) மிக விரைவில் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் உறுதியளித்தார்.
