தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கும், அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருப்பதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொருவர் ஆகியோரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து குறித்த பெண் அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளமை பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் காதலர் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெள்ளவத்தையில் இருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் நோக்கி தப்பியோடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்ட போது, பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்காக மாறுவேடத்தில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
