நியூசிலாந்தில் முதியவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
நியூசிலாந்தில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் பணியாற்றிய இலங்கை நாட்டைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவர், முதியவர் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றவாளி **நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்ட விதானகே** (Nilushan Jayanga Silva Ginthota Vidhanage) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் இருந்த முதியவர் ஒருவரை பாலியல் வன்முறை செய்ததாகவும், மற்றொரு குடியிருப்பாளரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த கிறைஸ்ட்சேர்ச் மாவட்ட நீதிமன்றம், கடந்த மே மாதம் இதற்கான தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றத்தின் தடையுத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை இவரது பெயர் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டது.
வழக்கின் தீர்ப்பின் போது கருத்து தெரிவித்த நீதிபதி ஜேன் ஃபாரிஷ், “பாதிக்கப்பட்ட முதியவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தவர்கள். அவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஒருவர், அந்த நம்பிக்கையை மீறி இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபட்டது மன்னிக்க முடியாதது” என்று தெரிவித்தார். குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றும், துளியும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, 11 வயது சிறுமி ஒருவரை தனது காரில் ஏறுமாறு மிரட்டியதாகப் பதிவான வழக்கிலும் இவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி சமயோசிதமாகச் செயல்பட்டு, காரின் பதிவு எண்ணைக் குறித்து வைத்துத் தனது தாயிடம் புகார் அளித்ததன் மூலமே இவன் கைது செய்யப்பட்டான்.
நீதிபதி வழங்கிய உத்தரவின்படி, குற்றவாளி தனது தண்டனையில் மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்த பிறகு, இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார். முதியோர் இல்லத்தின் பெயர் மற்றும் அவர் சார்ந்திருந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் விவரங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி தொடர்ந்து மறைக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்து காவல்துறையினர், இந்த முதியோர் இல்லத்தில் வேறு எவரேனும் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், தைரியமாக முன்வந்து புகார் அளிக்குமாறும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
