நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணியளவில் இந்த வன்முறைச் சம்பவம் ஆரம்பமாகியுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த மோதலுக்கு முதன்மைக் காரணமாகும். முதற்கட்ட விசாரணைகளின்படி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த வன்முறை வெடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நேற்றைய மோதலில் இருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஏற்பட்ட தொடர் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
மோதலில் படுகாயமடைந்த கைதிகள் உடனடியாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலையிலிருந்த கைதிகள் குழுவொன்று கூரை மேல் ஏறி தங்களது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் போது ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
தற்போது சிறைச்சாலை வளாகத்தில் நிலவும் பதற்றமான சூழ் நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக கலகத் தடுப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF), இராணுவம் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து ஆராய்வதற்கும், மோதலுக்கான பின்னணி குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இது தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
