கம்பளை பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நீண்டகாலமாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த அதிர்ச்சித் தகவல் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வௌிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகத் தொற்று காரணமாக குறித்த சிறுமி கம்பளை போதனா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகச் சிறுமி தொடர்ச்சியாக இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கம்பளைப் பொலிஸார் கைது செய்து, கம்பளை நீதவான் சரசி ஸ்ரீ பரணமன முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கம்பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாங்க கன்னங்கர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயால் இலங்கக்கோன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், கம்பளைப் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி இஷாரா ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
