சின்னப் பையன் புத்தகப் பையை தோளில் மாட்டியபடி வெளியில் இறங்கியதும், கதவை ஒருக்கணித்து சாய்த்து வைத்தவாறு சட்டென்று கீழே இறங்கினாள் மீனாட்சி . எட்டு மணி ஆவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்ததனால் அவசர அவசரமாய் சின்ன பயலின் கையைப் பிடித்து இழுத்தவாறு வேக நடை போட்டாள். எதிரே கொழுந்து கூடைகளை தலையில் மாட்டியவாறு அன்னலட்சுமியும் இராணியும் வருவது தெரிந்தது.”ஏ ராணி பாத்தியா டி, நேத்து காவக்காரன் வீட்டுல நடந்த கான் சண்டையை யாரோ எடுத்து டிக் டொக்குல போட்டாங்கடி பாத்தியா? ” என்று அன்னலட்சுமி கேட்க அதற்கு ராணி, “ஆமாடி அவனுக்கெல்லாம் அதுதான் சரி அப்படி டிக் டாக் ல போட்டு தான் அவன் மானத்தை எல்லாம் வாங்கணும். ” என்றாள். இதை கேட்டதும் அவர்கள் இருவருமே பலமாக சிரித்துக் கொண்டார்கள்.
எதிரே மீனாட்சியை கண்டவுடன் சிரிப்பை நிறுத்திவிட்டு “என்ன மேடம் இன்னைக்கு வேலைக்கு வல்லியோ?” என்று ரெண்டு பேரும் ஒரே குரலில் கேட்டார்கள் .” இல்லக்கா நான் ஸ்கூலுக்கு கொஞ்சம் அவசரமா போயிட்டு வரேன். டீச்சர் பொம்பளைய கொஞ்சம் கண்டுகிட்டு வரேன் ” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் விறு விறு என்று நடந்து போய்விட்டாள்.
பாடசாலையில் காலை கூட்டம் நடந்து முடிந்தவுடன் பிள்ளைகள் எல்லாரும் வரிசையாக வகுப்பறைக்கு போய்க்கொண்டிருந்தார்கள் . அதிபர் பிறம்புடன் முடி வெட்டாமல் நின்று கொண்டிருந்த பத்து மாணவர்களிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார். அந்தப் பக்கத்தில் கனகா டீச்சர் சட்டை க்கு சரியாக பின் குத்தாத ஒரு பெண் பிள்ளையின் சட்டைக்கு பின் குத்தி “டையை” ஒழுங்காக போட்டு விட்டுக் கொண்டிருந்தார் . அம்மாவையும் பையனையும் கண்டவுடன் அந்த பெண் பிள்ளையை அனுப்பிவிட்டு எதிரில் வந்து கையை கட்டிய படி நின்றார்.
டீச்சரை கண்டவுடன் மீனாட்சிக்கு கடும் கோபம் எரிச்சலை முகத்திலே காட்டிக் கொண்டாலும் வார்த்தையில் மரியாதை குறையாமல் கேட்டாள். என்னாங்க டீச்சர், நேத்து நீங்க என் மகனை கேட்டீங்களாமே “நீ எல்லாம் என்ன தோட்ட காட்டான் தானே?” னு உங்களுக்கு எப்படி டீச்சர் அப்படி பிள்ளைகளை பேசுறதுக்கு அதிகாரம் இருக்கு. நாங்க அட்டை கடியிலயும் மழ தண்ணிலயும் நாங்க பாடுபட்டு புள்ளை வளர்கிறது எங்களுக்கு தான் தெரியும். இப்படி உங்ககிட்ட பேச்சி வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல. படிச்சு கொடுக்க விருப்பம் இல்லாட்டி வர வேண்டானு சொல்லுங்க. நான் என் புள்ளய வீட்ல வச்சு சோறு போடுறேன்” மீனாட்சி மூச்சிரைக்க பேசியவுடன் சத்தம் கேட்ட அதிபரும் சட்டு என்று வந்து கணக்கு டீச்சரின் பக்கத்தில் நின்று விட்டார்.
பாருங்க சார் இந்த டீச்சர் வந்து நேத்து என் மகனை தோட்ட காட்டானுசொல்லி இருக்காங்க. அவன் வீட்டுக்கு வந்து அம்மா இனிமே நான் “உஸ்கூலுக்கு” போக மாட்டேன்னு ஒரே அழுகை சேர் .. அதிபருக்கு ஒரே வியப்பும் ஆச்சரியமும் சட்டென்று கனகா டிச்சரின் முகத்தைப் பார்த்தார். கனகா டீச்சர் மிகவும் அமைதியாக ஒரு சிறிய புன்முறுவலுடன் மீனாட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.
மலையகத்தின் அந்த மிகவும் பின்தங்கிய தோட்டப்புற பாடசாலையில் இப்பொழுது 15 வருடத்திற்கு மேலாக பணிபுரிபவர் தான் கனகா டீச்சர். மாணவர்களை மிகவும் மரியாதையுடனும் அக்கறையுடனும் நடத்துபவர். பெற்றோர்களிடமும் மிகவும் பொறுப்புடன் எப்போதும் நடந்து கொள்பவர். அவர் தோட்டக்கட்டான் என்று கூறினார் என மீனாட்சி கூறியதும் அதைக் கேட்டு விட்டு கனகா டீச்சர் அமைதியாக இருப்பதும் அதிபர் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. மீண்டும் திரும்பி கனகா டீச்சர் முகத்தை பார்த்தபோது அவர் மீனாட்சியிடம் சில கேள்விகளை கேட்க தயாராக இருப்பது புரிந்தது.
“வாங்க மீனாட்சி அம்மா” இன்னைக்கு தான் ஸ்கூல் பக்கம் உங்களுக்கு ரோட்டு தெரிஞ்சுச்சா? இப்போ நான் உங்களை ஸ்கூலுக்கு வர சொல்லியே ரெண்டு மூணு மாசத்துக்கு மேல ஆகுதே ஒரு தடவை கூட நீங்க ஸ்கூலுக்கு வரலையே? அப்புறம் இன்னைக்கு மட்டும் ஏன் வந்தீங்க?. எனக்கு வேலை டீச்சர், எனக்கு அப்படி நினைச்ச மாதிரியெல்லாம் எங்க தோட்டத்துல லீவு கொடுக்க மாட்டாங்க. இன்னைக்கு கங்காணி கூட சண்டை போட்டுட்டு நான் ஸ்கூலுக்கு வந்து இருக்கேன். ஓஹோ அப்படியா மீனாட்சியம்மா அப்ப ஏன் இன்னைக்கு மட்டும் வந்தீங்க? இன்னைக்கும் வராம இருந்திருக்கலாம் தானே? இல்ல டீச்சர், நீங்க ஏன் தோட்ட காட்டானு சொன்னீங்க? நான் அதைக் கேட்கிறதுக்காக தான் வந்தேன். தோட்ட காட்டான்னா உங்களுக்கு என்ன அவ்வளவு கேவலமா போச்சோ? கொழுந்து எடுக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எங்களுக்கு தான் தெரியும். தோட்ட காட்டு புள்ளைங்க ஸ்கூலுக்கு வரவும் தான் நீங்க சம்பளம் வாங்குறீங்க அது மனசுல வச்சுக்கிட்டு பேசுங்க” என்றாள் வெடுக்கென்று .
சரி சரி அப்போ உங்க பையன் ஒழுங்கா ஸ்கூலுக்கு வர்றதில்ல வீட்டுப்பாடம் செய்து கொண்டு வர்றதில்ல. நகம் வெட்றதில்ல, ஒழுங்கா முடி வெட்டுவதில்லை, வகுப்புல சரியான குழப்பம் புள்ளைகளோட சண்டை பிடிக்கிறான், அடிக்கிறான் இதெல்லாம் நான் சொல்லி அனுப்பியும் நீங்க அப்ப வந்து கேட்கல நான் தோட்டக்காட்டான்னு சொன்னதுனால தான் உங்களுக்கு கோபம் வந்து ஸ்கூலுக்கு வந்து இருக்கீங்க அப்படித்தானே? ஆமாம் என்பது போல சட்டென்று கனக டீச்சர் முகத்தை பார்த்துவிட்டு அந்த பக்கம் திரும்பிக்கொண்டாள் மீனாட்சி . ஆமாம் மீனாட்சியம்மா. ஆமாம் . தோட்ட காட்டானு உங்க புள்ளைய நான் திட்டினது உண்மைதான். அப்படி திட்டினா தான் நீங்க கட்டாயம் ஸ்கூலுக்கு வருவீங்கன்னு எனக்கு தெரியும். அதான் திட்டினேன். வியப்பும் கேள்விக்குரியுமாய் சட்டென்று கனகா டீச்சரின் முகத்தை பார்த்தாள் மீனாட்சி.
சரி மூணு வருஷத்துக்கு முன்னாடி O L செய்தானே உங்க மூத்த பையன் கிருஷ்ணமூர்த்தி அவன் இப்ப என்ன செய்யுறான்? “மூத்த மகன் வீட்டுல தான் இருக்காரு அவரிப்ப ஒன்லைன்ல கோர்ஸ் ஒன்னு செஞ்சுகிட்டு இருக்காரு. அவங்க அப்பா அவருக்கு இப்ப புதுசா வீல் ஒண்ணும் வாங்கி கொடுத்து இருக்காரு ” என்றாள் பெருமையாக.
டீச்சர் மென்மையாக சிரித்தபடி, “அப்படியா? ரொம்ப சந்தோஷம் என்றார். சரி என்ன கோர்ஸ் செய்றான் அது தெரியுமா உங்களுக்கு? ” தெரியல டீச்சர் ஆனால் அதை செஞ்சு முடிச்சா பெரிய பிசினஸ் செய்யலாமாமாம். அந்த கோர்ஸ்க்கு சல்லி மட்டும் 50 ஆயிரம். அப்புறம் மகன் படிக்கிறதுக்கு போனும் இல்ல தானே அதனால புது “போனு” ஒன்னும் வாங்கினோம் அம்பது ஆயிரம் கொடுத்து ”
அது சரி அரசாங்கம் இலவசமா படிச்சு கொடுத்து 11 வருஷம் ஒரு ஸ்கூல்ல படிச்சி அதுல ஒரு நல்ல ரிசல்ட் எடுக்க முடியாதவன் தான், இப்போ அம்பதாயிரம் செலவு பண்ணி அதுவும் ஆன்லைன் கிளாஸ் படிச்சு கஷ்டப்பட்டு பெரிய ஆளா வரப் போறானா?
சட்டென்று டீச்சர் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் ஆடிப் போய் திகைத்து நின்றாள் மீனாட்சி. டீச்சர் மேலும் தொடர்ந்தார். நான் உங்க பிள்ளைய தோட்ட காட்டான்னு சொன்னேனு உங்களுக்கு எவ்வளவு கோவம் வந்துச்சு? தோட்டக்காட்டான் புள்ள எதுக்கு படிக்கணும்னு யோசிச்சு தானே நீங்க கணக்கு இல்லாம அவன ஸ்கூலுக்கு ஒழுங்கா அனுப்பாம இருந்தீங்க? முதல்ல நாம தோட்டக்காட்டான் தானே என்கிற மனநிலையை நீங்க மாத்த கத்துக்கோங்க. ஏன் மலையகத்தில் பிறந்தவங்க எல்லாரும் கொழுந்து எடுத்தும் பில்லுவெட்டியும் லயத்திலேயே இருந்தும் தான் சாகனுமா? நல்ல நிலைமைக்கு வரக்கூடாதோ? ஏன் மலையகத்துல பிறந்து நல்ல நிலைமையில இருக்கவங்க யாருமே இல்லையா இப்போ? சரி உங்க மகனுக்கு வீல் வாங்கி கொடுத்தீங்களே, அந்த காசுக்கு ஏன் உங்களுக்கு சொந்தமா ஒரு வீடு வாங்கி இருக்க முடியாதா? அப்போ கடைசி காலத்துலயாவது அந்த வீட்டில நீங்க நிம்மதியா இருந்திருக்கலாம் தானே? இப்போ அந்த வீல் “பைனான்ஸயும்” மாசம் மாசம் நீங்க கட்டி தானே ஆகணும்? இப்போ நீங்க நினைச்சாலும் வீட்ல இருக்க முடியாது. கண்டிப்பாக உழைத்து தான் ஆகணும். கொழுந்து எடுத்து தான் ஆகணும் இது யாரோட தப்பு? அவனுக்கு நீங்க படிப்பிக்க வேணாம் வீட்ல படிக்கிறானான்னு கவனித்து பார்த்திருக்கலாம் தானே? அவன் ஏன் ஸ்கூலுக்கு ஒழுங்கா வர மாட்டேங்கிறானு நீங்க தேடி பார்த்து இருக்கலாம் தானே? உங்களுக்கு இருக்க ஒரே பிரச்சனை நீங்க கஷ்டப்பட்டாவது உங்க பிள்ளைகளை நல்லா வச்சிருக்கீங்க ஆடம்பரமா வச்சிருக்கீங்கன்னு ஊருக்கு காட்டணும். அதுக்காகத்தான் நீங்க இவ்வளவு கடன் பட்டு செலவழிக்கிறீங்க. இது எவ்வளவு பெரிய தப்புன்னு உங்களுக்கு எப்போ புரியும். அவன் கோர்ஸ் எல்லாம் படிக்கல எந்த நேரமும் பேஸ்புக்லயும் instagram-லயும் போஸ்ட் போடுறான். டிக் டாக் ல எந்த நேரமும் ரீல்ஸ் போடுறான். மலையகத்தில் நிறைய பெற்றோரோட பிரச்சினை இதுதான். அவன் இப்ப சோசியல் மீடியாவுக்காக வாழறான். இப்ப வசதியா ஒரு வீல் வேற வாங்கி கொடுத்து இருக்கீங்க. எப்படியும் ஒரு பொண்ண தேடி புடிச்சி வெளியில இனி நல்லா சுத்த ஆரம்பிப்பான். அப்புறம் அம்மா இந்த பொண்ணையே நான் கட்டிக்கிறேனு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நிப்பான். அப்புறம் கல்யாணமும் பண்ணி வச்சிட்டு அந்த லயத்து வீட்டிலேயே அவளையும் சேர்த்து வச்சு அவளுக்கும் சோறு போடுங்க.
ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரிஞ்சுக்கணும் எல்லாரும் ஒழுக்கமா வாழ்றதுக்கும் படிக்கிறதுக்கும் வசதியோ கஷ்டமோ தோட்டமோ லயமோ நகரமோ கிடையாது. எல்லாமே ஒருத்தரோட மனநிலை மட்டும் தான். நீங்க பட்ட கஷ்டத்தை உங்க பிள்ளை படக்கூடாதுன்னு நீங்க நினைச்சிருந்தா முதல்ல நீங்க அவனுக்கு கஷ்டம்னா என்னன்னு சொல்லிக் கொடுக்கணும். கேட்டவுடனே எல்லாம் வாங்கிக் கொடுக்கக் கூடாது. ஒரு நேரம் பட்டினி இருந்தா தான் சாப்பாடோட அருமை அவனுக்கு தெரியும். ஒரு நேரம் பேனா கடன் வாங்கி எழுதுனா தான் ஒரு பேனாவோட மதிப்பு அவனுக்கு தெரியும். ஏன் இப்ப அவன் O/ L எழுதி இந்த மூணு வருஷத்துக்கு எங்கேயாவது வேலைக்கு போய் இருந்தா கூட அவனுக்கு புடிச்ச மாதிரி ஒரு போன் வாங்கி இருக்கலாம் தானே? எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டப்பட்டு ஆசைப்பட்டு உழைச்சி படிச்சி தேடுற மாதிரி சும்மா கிடைச்சா அதோட மதிப்பு அப்படியே இருக்காது.
இப்படி பண்ணா நாளைக்கு அவன் உங்களை கூட ஒரு ஏடிஎம் மிஷின் மாதிரி தான் பார்ப்பான் அம்மானு யோசிக்க மாட்டான். டீச்சர் பேச பேச அவரின் குரலில் கடுமையான கோபம் தெரிந்தது. அதைவிட கண்களில் கவலையும் தெரிந்தது. டீச்சரின் முகத்தை பார்க்க கூட வெக்கப்பட்ட மீனாட்சி கண்கலங்கியவாறு தரையை பார்த்தவாறு மௌனமாக நின்று கொண்டிருந்தாள்.
கனகா டீச்சரையே கவனித்தவாறு நின்றிருந்த அதிபரை நோக்கி திரும்பினார் கனகா டீச்சர். மன்னிக்கணும் சார் உங்க முன்னாடி நான் இப்படி பேசி இருக்க கூடாது. என்னை மன்னிச்சிடுங்க சார். இப்போ இருக்க உலகம் ரொம்ப புதுசு சார் அதே மாதிரி ரொம்ப விசாலமானதும் கூட. நாமெல்லாம் படிக்கிறதுக்கு கஷ்டப்பட்ட மாதிரி இப்ப கஷ்டப்படவே தேவையில்லை எல்லாம் கையிலேயே இருக்கு. ஆனா கையில இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்குன்னு தெரியாம இப்பவும் மலையகத்தில் எவ்வளவு முட்டாள் ஜனங்கள் நாங்க மலையகத்தில் இருக்கோம். நாங்க தோட்ட காட்டான், சாணி ,விறகு அடுப்பு அட்டல், ஊதாங்கட்ட,மாங்கா புடுங்க போறோம், விறகு பொறுக்க போறோம் அப்படி இப்படி இந்த வீடியோசை எடுத்து டிக் டாக் லையும் பேஸ்புக்கில் போட்டு பரப்பிக்கிட்டு திரியுற ஒரு கூட்டம் ஒரு பக்கம். இதுதான் வாழ்க்கை இதுதான் முக்கியம் இதை வாழ்ந்தால் போதும்னு அந்த வீடியோவை பார்த்து அதை நம்பி வாழ்ற ஒரு கூட்டம் இன்னொரு பக்கம். மண்ணடுப்பும் விறகும் ஊதாங்கட்டையும் சாணியும் சேமங்கீரையும் ரொட்டியும் இதெல்லாம் சேர்ந்துதான் நம்ம எல்லாரையும் வளத்துச்சி. இதை நான் மறக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை சார். ஆனால் இப்படி பழைய விஷயங்களை வச்சுக்கிட்டு எந்த முயற்சியும் பண்ணாம இதை சொல்லிக்கிட்டே வாழ்க்கைய. நாசமாக்கிக் கொண்ட இளம் சமுதாயத்தை நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு சார்.
எவ்வளவா விஷயங்கள்ல சாதனை பண்ணி மலையகத்தை உலக அளவில் பேச வைத்தவர்களும் இங்கே இருக்கிறார்கள். அதேபோல நாங்க மலையகத்தான் அதுவும் தோட்டக்காட்டான் அப்படின்னு சொல்லிக்கிட்டு இன்னும் எவ்வளவோ பேர் வளர்ச்சி அடையாம பின்தங்கி போய் இருக்கிறதும் நம்ம மலையகத்தோட சாபக்கேடு. எனக்கு மீனாட்சி அம்மாவோட சின்னப் பையன்னால எந்த பிரச்சனையும் இல்ல சார். கிருஷ்ணமூர்த்திக்கு முதல் வகுப்பு டீச்சரை நான்தான். அவனோட வாழ்க்கை இப்படி போறத பாத்தா ஒரு ஆசிரியரா அதோட ஒரு அம்மாவா என் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு சார். இப்படி எத்தனையோ கிருஷ்ணமூர்த்திகள் இந்த மலையகத்தில் இருக்காங்க இப்போ. அவங்களுக்கு சோறு போடறதுக்காக மழையில நனைஞ்சு அட்டைப் பூச்சி கிட்ட கடிவாங்கி காலத்துக்கும் கொழுந்து எடுக்கிற மீனாட்சிகளும் நிறைய பேர் இருக்காங்க.
கடைசியா ஒரு விஷயம் மட்டும் சொல்லிடுறேன் சார். எங்க அப்பா தோட்டத்துல கவாத்து வெட்டும் போது தான் சார் பாம்பு கடிச்சு இறந்து போனாரு. எங்கம்மா கஷ்டப்பட்டு கொழுந்து எடுத்து தான் என்ன படிக்க வச்சாங்க சேர். இப்போ நான் அவங்கள கவனமா நிம்மதியா பார்த்துக்கிறேன்.
கனகா டீச்சர் அங்கிருந்து போய் விட்டார். அதிபரால் ஒன்றுமே பேச முடியவில்லை. சின்னவனை கொண்டு போய் அவன் வகுப்பிலே விட்டுவிட்டு வேகவேகமாய் நடந்து வீடு வந்து சேர்ந்தாள். கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனபோது நாங்க எல்லாம் “லயத்து புள்ளைங்கோ” என்ற பாடலுக்கு டிக் டாக் செய்து கொண்டு இருந்தான் கிருஷ்ணமூர்த்தி. மீனாட்சி போன வேகத்தில் எடுத்தாள் விளக்குமாறை……
