பொகவந்தலாவை – கிள்ளார்னி தோட்டத்தைச் சேர்ந்த 71 வயது முதியவரான நாராயணசாமி ராமையாவுக்குக் கிடைக்க வேண்டிய ‘அஸ்வெசும’ நலன்புரி நலஉதவிக் கொடுப்பனவு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வயோதிபக் காலம் மற்றும் கடுமையான பார்வைக் குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் முதியவரின் உரிமையைப் பறித்து, அதிகாரியின் உறவினர் ஒருவருக்குப் பணம் திசைதிருப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட முதியவர் நாராயணசாமி ராமையா கூறுகையில், 2023ஆம் ஆண்டில் இரண்டே மாதங்கள் மட்டுமே தனக்கான அஸ்வெசும பணம் கிடைத்ததாகவும், அதன் பின்னர் எந்தவித முன்னறிவிப்புமின்றி அது திடீரென நிறுத்தப்பட்டதாகவும் வேதனை தெரிவிக்கிறார். இது தொடர்பான ஊடகச் செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, அவர் நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார்.
அங்குள்ள அரச உத்தியோகஸ்தர் ஒருவர், முதியவர் நாராயணசாமியின் அஸ்வெசும பணம், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உதவி இளைஞர் சேவை அதிகாரியின் மாமனாரின் வங்கிக் கணக்கிற்கே மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆய்வில் வெளிவந்த முறைகேடுகள்:
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன:
பதிவு விவரங்கள்: 2022ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும பயனாளர் பட்டியலில், நோர்வூட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொகவான கிராம சேவகர் பிரிவில் 63ஆம் இலக்கமாக “லெச்சுமன் நாராயணசாமி” எனும் பெயர் பதிவாகியுள்ளது. அதில் முகவரியாக “கிள்ளார்னி தோட்டம், பொகவந்தலாவை” எனவும், Household Reference Number – HH-2-3-15-04-305-00950 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள்: இந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த வீடு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை முற்றிலும் நாராயணசாமி ராமையாவுக்கே சொந்தமானவை என்பது உறுதியாகியுள்ளது.
அடையாளம் மாற்றப்பட்ட மோசடி: விண்ணப்பத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள “லெச்சுமன் நாராயணசாமி”யின் தேசிய அடையாள அட்டை விவரங்களை வாக்காளர் பட்டியல் மூலம் பரிசோதித்தபோது, அவர் கெர்கஸ்வோல்ட் (லெச்சுமி பஹல வட்டாரம்) பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, இவர் பாதிக்கப்பட்ட நாராயணசாமி ராமையாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல.
கிள்ளார்னி தோட்டத்தைச் சேர்ந்த 71 வயதுடைய நாராயணசாமிக்குரிய Household Reference Number மற்றும் தனிப்பட்ட ரகசியத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தி, கெர்கஸ்வோல்ட் தோட்டத்தைச் சேர்ந்த லெச்சுமன் நாராயணசாமி எனும் வேறு நபருக்கு இந்த அஸ்வெசும கொடுப்பனவு மோசடியாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதியவர் நாராயணசாமி ராமையாவுக்குச் சொந்தமான குறைந்தது 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏழை எளிய மக்களின் வயோதிபக் கால வாழ்வாதாரத்தை இலக்கு வைத்து நடக்கும் இத்தகைய மோசடிகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடி விசாரணைகளை நடத்தி உரிய நீதி வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
- பா. நிரோஸ்
(02.09.2026)
#aswesuma #NuwanEliya #Maskeliya #SriLankaNews #TamilNews #Inquiry
