கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – பாலையூற்று அருள்மிகு நாக கன்னியம்மன் திருக்கோயில்

நானிலத்தில் நல்லாட்சி நாளும் நிலவிவிட
நல்லவர்கள் வாழ்வில் எழுச்சி கிட்டிவிட
நிம்மதியே எங்கும் நிறைந்து அமைதி நிலவிவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே

உன்னடியார் வாழ்வு வளம் பெற்றுவிட
உள்ளங்களில் நல்லெண்ணம் நின்று நிலைத்துவிட
உண்மை யெங்கும் உயர்ந்து நிலைத்து நிலவிவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே

எங்கள் மண்ணின் காவலனாய் இருந்து காத்துவிட
எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கிவிட
ஏற்றமுடன் எழுச்சி பெற்று வாழ்ந்துவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே
வளமான பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட
வரலாற்றில் எம் பெருமை நிலைத்து நின்றுவிட
வற்றாதவுன் கருணை நாம் என்றும் பெற்றுவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே
வெற்றிகளைப் பெற்று நாம் வீரமாய் வாழ்ந்துவிட
ஆற்றலுடன் என்றும் முன்னேறிச் சென்றுவிட
அனைத்து நலன் பெற்று தலைநிமிர்ந்து நின்றுவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே
கேட்கும் நல்வரங்கள் நாம்பெற்று மகிழ்ந்துவிட
கேடுகள் அண்டாது சுகமாய் வாழ்ந்துவிட
தளராத மனவுறுதி பெற்று நாம் இருந்துவிட
அருளளிப்பாய் பாலையூற்றில் கோயில் கொண்ட நாககன்னித் தாயே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
