ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு, 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன் மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் ஒவ்வொரு பிரிவினாலும் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினாலும் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு தனித்தனியாக ஆராயப்பட்டது.
தம்புள்ளை, இங்கிரிய, வாழைச்சேனை, மில்லனிய மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் கைத்தொழில் வலயங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்ததுடன், காணிகளை ஒதுக்குதல், மின்சாரம், நீர், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்போது, ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்வதற்கு அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி,கைத்தொழில் துறை தொடர்பில் அரசாங்கத்தின் வகிபாகம் மற்றும் வரையறைகளை உரிய வகையில் அடையாளம் காண்பதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
அரச சார்ந்த தொழில்முயற்சிகளின் அபிவிருத்தி தொடர்பான தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், சீனி மற்றும் உப்பு தொழிற்துறைகள் சார்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான மாற்று முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை ஒன்றிணைக்கும் செயல்முறையின் தற்போதைய நிலைமை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதுடன், வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பாரிய அளவிலான நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, இறுதியில் அந்த நிறுவனங்கள் மக்களின் வரிப் பணத்தில் பராமரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் போது, குறித்த நிறுவனங்களின் செயற்திறனை அதிகரித்தல் மற்றும் அவற்றை நடத்துவதற்காக அதற்கு முன்னர் ஏற்பட்ட செலவுக்கும், ஒன்றிணைத்த பின்னர் ஏற்படும் செலவுக்கும் இடையில் ஒப்பீட்டளவில் குறைவு ஏற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தொழில்முயற்சியாண்மை மற்றும் கைத்தொழில் மாற்று அதிகாரசபையை (EITA – Entrepreneurship and Industry Transformation Authority) நிறுவுவது தொடர்பான முன்மொழிவு மற்றும் அதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
ஏற்றுமதியாளர்களும் கைத்தொழிலாளர்களும் அந்தந்தத் துறைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், ஏற்றுமதியாளர்களையும் கைத்தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்துவதற்காக வழங்கவேண்டிய பொதுவான நிவாரணங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
கைத்தொழில் துறையில் சில குறிப்பிட்ட பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் நமது நாட்டுக்கே உரித்தான தனித்துவமான திறனொன்றை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி,
ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் கைத்தொழில், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-14
