மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
நெடியமடு பகுதியைச் சேர்ந்த நாகராசா நவதீப் என்ற 6 வயதுடைய சிறுவனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.
நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்பக்கத்தில், உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன திணைக்களத்தினால் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு மிக அருகில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டிருந்த போதிலும், அதற்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பகல் 11.00 மணியளவில் சிறுவன் தன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அக்குழியில் தவறி விழுந்துள்ளான். உடனடியாக மீட்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன், ஆயித்தியமலை பொலிஸார் மேல் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
அதேவேளை, கட்டுமானப் பணியின்போது எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாததே இந்த அனர்த்தத்திற்கு முதன்மைக் காரணம் என அப்பகுதி பொதுமக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கடும் விசனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
