மத்திய மாகாண கல்வித்துறைப் பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் அவசர சந்திப்பு!
மத்திய மாகாணத்தின் கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு குறைபாடுகள், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகளுக்கு உடனடியாகத் தீர்வு காணக்கோரி, மத்திய மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (23-06-2026) பிற்பகல் 1:00 மணிக்கு நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் திருமதி மல்லிங்கொட கலந்துகொண்டு மாகாண கல்வித்துறையின் வீழ்ச்சி நிலை குறித்து ஆளுநரின் கவனத்திற்குப் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விபரங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரசெல்வன் மேலும் விபரங்களை ஊடகங்களுக்குத் பகிர்ந்து கொண்டார்.
நிர்வாகச் சீர்கேடுகளும் முடங்கியுள்ள ஓய்வூதியக் கோவைகளும்:
ஹட்டன் கல்வி வலயத்தில் நீண்ட காலமாக நிரந்தர கோட்டக் கல்வி அதிகாரி (AO) ஒருவர் நியமிக்கப்படாததன் காரணமாக, அங்கு பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஓய்வூதியக் கோவைகள் (Files) சரிபார்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் தங்களது வாழ்நாள் சேவையின் பின்னரும், முதிய வயதில் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேநேரம், நுவரெலியா வலயத்தில் கடந்த வருடத்திற்குரிய வலய உள்-இடமாற்றங்கள், நடப்பு கல்வி ஆண்டின் பாதியிலும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனால் பாடசாலைகளின் வழமையான கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
முறையற்ற நிதி சேகரிப்பும் ஆசிரியர் அழுத்தங்களும்:
பாடசாலைகளில் சட்டவிரோதமான முறையிலும், முறையற்ற வடிவங்களிலும் மாணவர்களிடமிருந்து நிதி சேகரிக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன், சில பாடசாலைகளில் நிருவாகத் தரப்பால் வழங்கப்படும் கடுமையான அழுத்தங்கள் காரணமாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதியாகப் பணியாற்ற முடியாமல், பாடசாலைகளை விட்டு வெளியேறும் அவல நிலை காணப்படுகிறது. இந்த அநாவசிய அழுத்தங்கள் மற்றும் கட்டாய நிதி வசூலிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, அவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புயல் பாதிப்புகளும் தீர்க்கப்படாத மாணவர் பிரச்சினைகளும்:
கொத்மலை கல்வி வலயத்தில் அண்மையில் வீசிய ‘டித்துவா’ புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வெவடன் தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளின் மாணவர்கள் தற்போதும் எதிர்நோக்கி வரும் பல்வேறு அத்தியாவசியப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இச்சந்திப்பில் மிக முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றுக்கு அவசர நிவாரணம் கோரப்பட்டது.
பாடப்புத்தக விநியோகக் குறைபாடுகளும் ஆசிரியர் பற்றாக்குறையும்:
மாகாணத்தின் பல பாடசாலைகளில் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. குறிப்பாக, வலப்பனை கல்வி வலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் 20 மாணவர்களுக்கு இதுவரை விஞ்ஞான பகுதி-1 பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. நடப்பு ஆண்டின் முதலாம் தவணை நிறைவடைந்துள்ள நிலையிலும், மாணவர்களுக்குப் புத்தகங்கள் கிடைக்காதது அவர்களின் கல்வி வளர்ச்சியைப் பாதிக்கும் எனச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், மாகாணத்திலுள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் கோரப்பட்டது.
அதிபர் நியமனங்கள்:
கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி, முறையான மற்றும் தகுதி அடிப்படையிலான நியமனங்களை மாத்திரம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆளுநரின் நடவடிக்கை:
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்த மத்திய மாகாண ஆளுநர், புயலினால் பாதிக்கப்பட்ட கொத்மலை வலயப் பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் மாணவர் தேவைகள் குறித்து உடனடியாகக் கவனம் செலுத்துவதாகவும், ஏனைய கல்வி வலயங்களின் நிருவாகக் குறைபாடுகள், முறையற்ற நிதி வசூலிப்புகளைச் சீரமைக்க உரிய அதிகாரிகளுக்கு உடனடியாகப் பணிப்புரை விடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அத்தோடு கண்டி வலயத்தில நடைப்பெற்று வருகின்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாகவும் ,இடமாற்ற குழு அனுமதி இன்றி செய்யப்படும் இடமாற்றங்கள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தொழிற்சங்க உறுப்பினருக்கு பதிலளிக்க முடியாது என கண்டி வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அந்தரகே மற்றும் பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி ரட்ணசுரேந்திர என்போர் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து அவர்களின் மறைகேடுகளை அறிய முடிகிறது. அத்தோடு அவர்கள் இதுவரை இடமாற்ற குழு இல்லாமல் நடந்த இடமாற்றங்களை இரத்து செய்வதாக தெரிவித்தாலும் இன்றும் பல அதிரடியான இடமாற்றங்களை செய்துள்ளனர். இவை ஆசிரியர்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.
