மலையகப் பாடசாலைகளுக்கு காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகளிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள் நிர்வாக அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றிடமிருந்து பரிந்துரைகள் முன்வைக்கபட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி குறித்து, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் இன்று (23.07.2026) விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
மூன்றாவது தடவையாகவும் பாராளுமன்ற கட்டட வாகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலானது, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இக்கூட்டத்தில், முன்னதாக கல்வி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட 22 தீர்மானங்களில் பெரும்பாலானவற்றுக்கு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன.
இதேவேளை பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி தொடர்பிலான பிரச்சினைகளைதத் தீர்க்க, கல்வி அமைச்சர் தலைமையில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்குமிடையிலான முத்தரப்பு கலந்துரையாடலுக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் அனைத்து மாகாணங்களிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தமிழ்மொழி மூல 1AB பாடசாலைகைளை உருவாக்குவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டது.
அத்துடன் விசேட தேவையுடைய மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு விரைவில் 23 ஆசிரிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதடன் எதிர்காலத்தில் கல்வியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல், கிட்ணன் செல்வராஜ், கலைச்செல்வி ,நிலுசா லக்மாலி கமகே,, அனுஷ்கா திலகரத்ன, தினேஸ் ஹேமந்த ஆகியோருடன் அமைச்சுக்களின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
