Author: Thana
பாக்கிஸ்தானில் நடைபெறும் 3 ஆவது சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர். கடந்த கடந்த 27 ஆம் திகதி பயணமான இந்த போட்டியாளர்களில் வவுனியாவை சேர்ந்த செல்வி டிலக்சினி கந்தசாமியும் இடம்பெற்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில் பெரும் கஷ்டத்திற்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியின் காரணமாக இந்த வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் 150 வருடங்களின் பின்னர் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1875ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பானின் வெப்பநிலை 35 பாகை செல்சியஸை தாண்டியுள்ளது. இசேசாகி நகரின் வெப்பநிலை 40 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரித்துள்ளதால் குளிரூட்டி போன்ற மின்சார உபகரணங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதில் தடைகள் காணப்படுவதாக ஜப்பான் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதனால் தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து வைக்குமாகு ஜப்பான் அரசாங்கம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் அனைத்து தபால் அலுவலகங்களும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மாத்திரம் திறந்திருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக மாத்திரம் அரச அலுவலகங்களை திறப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தற்போது நிலவும் காகித தட்டுப்பாடு காரணமாக தபால் சேவைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் கடிதங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. தபால் சேவைக்கான முத்திரைகள் மற்றும் கடித உறைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளக கடித சேவைக்காக கடதாசி பயன்படுத்துவதற்கு பதிலாக மின் அஞ்சலை பயன்படுத்துவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தபால் மா அதிபர் குறிப்பிட்டார். இதேவேளை சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட கொடுப்பனவுகள், சர்வதேச தபால் மூலம் பல்வேறு பொருட்கள் கிடைப்பதன் காரணமாகவும்m தபால் பொருட்களை விநியோகிக்க நேர்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயக திணைக்களம் எதிர்வரும் 10 தினங்களில் பிறப்புஇ இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இருதினங்கள் மாத்திரம் விநியோகிக்கும். இதுதொடர்பாக பதிவாளர் நாயக திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,எதிர்வரும் 10 தினங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இருதினங்கள் மாத்திரம் விநியோகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு தினங்களில் மாத்திரம் காலை 8.30லிருந்து மாலை 4.00மணி வரை இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். சகல காணி பதிவாளர் சேவைகளும் அந்த இரண்டு தினங்களுக்கு மாத்திரம் செயற்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பத்தரமுல்லை, சுஹுருபாயவிலுள்ள கிளை, குருணாகல், கண்டி, மாத்தறை குடிவரவு – குடியகல்வு திணைக்கள கிளை அமைந்துள்ள பிரதேச செயலக அலுவலகங்களில், மாவட்ட பதிவாளர் பிரிவு வாரத்தின் 5 நாட்களும் இயங்குமெனவும், அவற்றில் வழமை போன்று குறித்த சேவைகளை பெற முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கட் அணிகளின் தலைவர் இயன் மோர்கன், சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கட் அணியை சம்பியனாக வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்த பெருமை இவரை சாரும், இங்கிலாந்து கிரிக்கட் வரலாற்றில் வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் அணியை சிறந்த முறையில் வழிநடத்திய பெருமை இவரை சாரும். இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அலெஸ்ட்ரியா குக் 2015ஆம் ஆண்டில் பதவி விலகியதைத் தொடர்ந்து அணியின் தலைவராக இவர் பணியாற்றியுள்ளார். இயன் மோர்கன், இங்கிலாந்து கிரிக்கட் அணியில் 126 ஒருநாள் போட்டிகளிலும், 72 ரி-20 போட்டிகளிலும் தலைமை பொறுப்பேற்று வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உட்பட 34 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் ஒரு வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொரியா மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கையின் வதிவிடப் பணிப்பாளர் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 27ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. தற்போது கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்து கொரியவில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கைத் தொழிலாளர்களை விரைவாக கொரியாவுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு 250 பேரை கொரியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் லீ அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும், தரவுத்தளத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்த கோரிக்கைக்கு அமைய தரவுத்தளத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது குறித்து அடுத்த வாரம் பரிசீலிக்கப்படும் என்றும்…
பசறை, சபுகஸ்கந்த மற்றும் எத்திமலே ஆகிய பகுதிகளில் எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 60 லீற்றர் டீசலுடன் 40 வயதுடைய ஒருவர் பசறை பிரதேசத்தில் நேற்று பொலிஸாரினால் சந்தேகத்தின்பேரில் கைது கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு, எதிர்வரும் 30ஆம் திகதி பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சபுகஸ்கந்த இஹல பியன்வில பிரதேசத்தில் 460 லீற்றர் டீசலுடன் 48 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, 1220லீற்றர் பெற்றோலை பதுக்கி வைத்திருந்த 60 வயதுடைய நபர் ஒருவர் நேற்று எத்திமலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்ததன் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். மத்திய ஆசியாவின் சோவித் யூனியனின் 2 மாநிலங்களுக்கு இவ்வாரம் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தஜிகிஸ்தான், துர்மெனிக்ஸ்தான் ஆகிய நாடுகளுக்கே அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அத்தோடு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவை மொஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தைகளையும் விளாடிமீர் புட்டின் மேற்கொண்டுள்ளார். புட்டின் தஜிகிஸ்தான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, ஒரு சில முக்கிய சந்திப்புக்களிலும் கலந்துக்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கின்ற அத்தியாவசிய பொருட்களை சகலருக்கும் கிடைக்கும் வகையில் பங்கிடுசெய்வதற்கு வசதியாக ஒரு குடுப்பத்தில் யாராவது ஒருவர்மட்டும் அட்டையினை பயன்படுத்தவும், எரிவாய்வு என்றால் ஒருமாதத்திற்கு ஒன்று என்ற வகையிலும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் மண்ணெண்ணெய் குறித்த அளவிலும் வழங்குவதற்கு என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் பங்கீட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.